2014-08-25 16:13:15

பத்திரிகையாளர் ஜேம்ஸ் ஃபோலி அவர்களின் பெற்றோருக்கு திருத்தந்தையின் இரங்கல் தந்தி


ஆக.25,2014. இஸ்லாம் தீவிரவாதிகளால் சிரியாவில் கொலைச்செய்யப்பட்ட அமெரிக்கப் பத்திரிகையாளர் ஜேம்ஸ் ஃபோலி அவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஏற்கனவே ஜேம்ஸ் ஃபோலி அவர்களின் பெற்றோரை, தொலைபேசியில் அழைத்து தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் ஆழ்ந்த கவலையையும் செப உறுதியையும் வெளியிட்டு ராக்வில் (Rockville Center) ஆயர் வில்லியம் ஃபிரான்சிஸ் மர்ஃபி வழியாக அக்குடும்பத்திற்கு அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில், மனிதகுலத்தில் வன்முறைகள் நிறுத்தப்பட்டு, ஒப்புரவும் அமைதியும் நிலவவேண்டும் என .
செபிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 19, கடந்த செவ்வாயன்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் தலைவெட்டப்பட்டு இறந்த பத்திரிகையாளர் ஜேம்ஸ் ஃபோலி அவர்களின் பெற்றோர் John, Diane Foley ஆகிய இருவரையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஏற்கனவே தொலைபேசியில் அழைத்துப் பேசியுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இந்த இரங்கல் செய்தியை அவர் பெயரால் திருப்பீடச்செயலர் கர்தினால் பியேத்ரோ பரோலின் அவர்கள் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு அனுப்பியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.