2014-08-23 15:29:53

மதுரை உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயராக, மேதகு ஆயர் அந்தோணி பாப்புசாமி அவர்கள் பணியேற்பு


ஆக.23,2014. மதுரை உயர்மறைமாவட்டத்தின் ஆறாவது பேராயராக, ஆகஸ்ட் 24, இஞ்ஞாயிறன்று மேதகு ஆயர் அந்தோணி பாப்புசாமி அவர்கள் பணியேற்கிறார்.
மதுரை ஞானஒளிவுபுரம் புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இஞ்ஞாயிறு மாலை 5.30 மணிக்கு இந்தப் பணியேற்புத் திருப்பலியும், அதன்பின்னர் வாழ்த்துக் கூட்டமும் நடைபெறும்.
மதுரை உயர்மறைமாவட்டத்தின் ஆறாவது பேராயர் பணியேற்புத் திருநிகழ்வை, இந்தியத் திருப்பீடத் தூதர் பேராயர் சால்வத்தோரே பினோக்கியோ அவர்கள், முன்னின்று நடத்துகிறார்.
இந்நிகழ்வில் தமிழக ஆயர்கள், ஏறக்குறைய 500 அருள்பணியாளர்கள், ஆயிரக்கணக்கான அருள் சகோதரிகள், பொதுநிலையினர் கலந்து கொள்வார்கள்.
மதுரை உயர்மறைமாவட்டத்தின் ஆறாவது பேராயர் மேதகு ஆயர் அந்தோணி பாப்புசாமி அவர்கள் ஆகஸ்ட் 25 திங்கள் காலை 6.30 மணியளவில் மதுரை புனித மரியன்னை பேராலயத்தில் நன்றித் திருப்பலி நிகழ்த்துவார். பின்னர் காலை 9 மணிக்கு பேராயர் இல்லத்தில் உயர்மறைமாவட்டத்தின் அருள்பணியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திண்டுக்கல் ஆயராகப் பணியாற்றிய மேதகு ஆயர் அந்தோணி பாப்புசாமி அவர்களை, மதுரை உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயராக, கடந்த ஜூலை 26ம் தேதியன்று அறிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.