2014-08-23 15:30:05

ஈராக் புலம்பெயர்ந்த மக்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் பத்து இலட்சம் டாலர் உதவி


ஆக.23,2014. ஈராக்கில் கட்டாயத்தின்பேரில் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ள கிறிஸ்தவ மற்றும் பிற சிறுபான்மை மத மக்களுக்கு உதவுவதற்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பத்து இலட்சம் டாலர் வழங்கியுள்ளார் என்று கூறினார், கர்தினால் பெர்னான்டோ ஃபிலோனி.
திருத்தந்தையின் பிரதிநிதியாக, இம்மாதம் 12 முதல் 20 வரை ஈராக்கின் எர்பில் நகருக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட, நற்செய்தி அறிவிப்புப் பேராயத் தலைவர் கர்தினால் ஃபிலோனி அவர்கள், திருத்தந்தையின் இந்நிதியுதவியைத் தான் எடுத்துச் சென்றதாகத் தெரிவித்தார்.
இந்நிதியுதவியில் 75 விழுக்காடு கத்தோலிக்கருக்கும், 25 விழுக்காடு யாசிதி இன மக்களுக்கும் வழங்கப்பட்டதாகவும் கூறினார் கர்தினால் ஃபிலோனி.
ஐஎஸ்ஐஎஸ் இஸ்லாம் தீவிரவாதிகளின் வன்முறைகளால் வெளியேறிய எழுபதாயிரத்துக்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள், குர்திஸ்தான் தலைநகரான எர்பில் நகரில் வாழ்ந்து வருகின்றனர். இந்நகர், ஐஎஸ் இஸ்லாமிய நாட்டுக்கு ஐம்பது மைல் தூரத்தில் உள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் இஸ்லாம் தீவிரவாதிகளின் கொலை மிரட்டல்களால், கிறிஸ்தவர்கள் யாசிதி இனத்தவர், ஷியா இஸ்லாம் பிரிவினர் என 12 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு கட்டாயமாக வெளியேறியுள்ளனர்.

ஆதாரம் : CNA







All the contents on this site are copyrighted ©.