அர்ஜென்டீனாவில் அதிகரித்து வரும் தற்கொலைகள் குறித்து தலத்திருஅவை கவலை
ஆக.22,2014. அர்ஜென்டீனா நாட்டிற்கு வளர்இளம் பருவத்தினரும் இளையோரும் மிகவும் மதிப்புமிக்க
முதலீடுகள் என்பதால் அவர்களை உருவாக்குவதில் அதிகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என,
அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறினார். அர்ஜென்டீனாவில் வளர்இளம் பருவத்தினர் மத்தியில்
தற்கொலைகள் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்து அனைத்துக் குடும்பங்களுக்கும்,
பொது மக்கள் சமுதாயத்துக்கும் செய்தி வெளியிட்டுள்ள Santiago del Esteroவின் துணை ஆயர்
Torrado Mosconi இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். வாழ்வின் இன்னல்களை எதிர்நோக்குவது
குறித்த நேர்மறை விழுமியங்கள் இளையோர்க்குக் கற்றுக்கொடுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள
ஆயர், குடும்ப செபம், ஆன்மீக உண்மைகளைப் போற்றும் பழக்கம், குடும்ப அமைதி ஆகியவை வழியாக
வீடுகளில் இறைவனின் பிரசன்னத்தை வளர்க்க வேண்டும் எனவும் கேட்டுள்ளார். அர்ஜென்டீனாவில்
1991ம் ஆண்டுக்கும் 2000மாம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள்
மத்தியில் தற்கொலை விகிதம் 1.5 விழுக்காட்டிலிருந்து 6.1 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
சமூக-உளவியல் நோய்கள், குறிக்கோளின்மை, போதைப்பொருள் பயன்பாடு, மதிப்பீடுகளின்படி
வாழும் நல்ல எடுத்துக்காட்டுகள் இல்லாமை தற்கொலைகளுக்குக் காரணமாகச் சொல்லப்படுகின்றது.