திருத்தந்தையின் அமைதி தின தலைப்பு : 'அடிமைகள் என்பது இனிமேல் இல்லை, அனைவரும் சகோதர
சகோதரிகளே'
ஆக.21,2014. 2015ம் ஆண்டு ஜனவரி முதல் நாள் திருஅவையில் சிறப்பிக்கப்படும் உலக அமைதி
நாளுக்கென 'அடிமைகள் என்பது இனிமேல் இல்லை, அனைவரும் சகோதர சகோதரிகளே' என்ற தலைப்பை அறிவித்துள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ். 48வது உலக அமைதி தினத்திற்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்
தேர்ந்தெடுத்துள்ள இத்தலைப்பு, இந்த ஆண்டின் உலக அமைதி தினத்தலைப்பின் தொடர்ச்சிபோல்
அமைந்துள்ளது. 'சகோதரத்துவம், அதுவே அமைதிக்கான அடிப்படையும் பாதையும்' என சகோதரத்துவத்தை
47வது உலக அமைதி தினத்தில் வலியுறுத்திய திருத்தந்தை, இம்முறை, அடிமைகளற்ற, அனைவரும்
சமமான ஓர் உலகை வலியுறுத்தியுள்ளார். மேலும், நாம் கடவுளின் குழந்தைகளாக மகிழ்ச்சியில்
திளைக்கும்பொருட்டு, நம் இதயங்களை சுதந்திர நிலையிலும், ஒளியால் நிரப்பப்பட்டதாகவும்
விளங்க இறை அருளை வேண்டுவோம் என இவ்வியாழனன்று தன் டுவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை
வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.