மியான்மாரில் அமைதி இயலக் கூடியதே, கச்சின் மாநில ஆயர்கள்
ஆக.19,2014. மியான்மாரில் பல்வேறு இனக் குழுக்களையும், கலாச்சாரங்களையும், வளங்களையும்
மதிக்கின்ற ஓர் உண்மையான மத்திய கூட்டாட்சி அமைப்பு உருவாக வேண்டுமென்று, அந்நாட்டின்
கச்சின் மாநில ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். மியான்மாரில் அமைதியைக் கொண்டுவர இயலும்
என்பதாலேயே, அந்நாட்டின் மோதல்களுக்கு ஒரு நிலையான தீர்வைக் கொண்டுவருமாறு, அரசையும்,
இராணுவத்தையும், பல்வேறு சிறுபான்மை இனக் குழுக்களையும், புரட்சிக் குழுக்களையும் தாங்கள்
தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக ஆயர்கள் கூறியுள்ளனர். மூன்றாண்டுகளாக இரத்தம் சிந்தும்
மோதல்கள் இடம்பெறும் கச்சின் மாநிலத்தின் ஆயர்கள், மியான்மாரில், குறிப்பாக, கச்சின்
மாநிலத்தில் அமைதிக்காக விண்ணப்பித்துள்ளனர். மியான்மாரில் 135க்கும் மேற்பட்ட இனக்
குழுக்கள் உள்ளன. சீன எல்லையிலுள்ள கச்சின் மாநிலம் கடந்த காலத்தில், மியான்மார் இராணுவ
அரசினால் கடுமையாகத் துன்புறுத்தப்பட்டது. 17 ஆண்டுகள் அமைதியாக இருந்த இம்மாநிலத்தில்
2011ம் ஆண்டு ஜூனில் தொடங்கிய புதிய கலவரத்தால் பலர் இறந்துள்ளனர், குறைந்தது 2 இலட்சத்துக்கு
மேற்பட்டவர்கள் புலம்பெயர்ந்துள்ளனர்.