ஈராக்கில் வன்முறைகளை நிறுத்துவதற்கு பன்னாட்டுத் தலையீட்டுக்கு திருத்தந்தை ஆதரவு
ஆக.19,2014. இஸ்லாம் தீவிரவாதிகளால் கிறிஸ்தவரும், பிற சிறுபான்மை மதத்தவரும் நசுக்கப்பட்டுவரும்
ஈராக்கில் இடம்பெற்றுவரும் தாக்குதல்கள் முடிவுக்கு வருவதற்குப் பன்னாட்டுத் தலையீட்டை
ஆதரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். ஈராக்கில் கிறிஸ்தவருக்கும், பிற சிறுபான்மை
மதத்தவருக்கும் எதிரான வன்முறை முடிவுக்கு வருவதற்கு தனது திருப்பயணம் உதவுமென்றால்,
தான் அந்நாட்டுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் கூறினார் திருத்தந்தை
பிரான்சிஸ். தென் கொரியத் திருப்பயணத்தை முடித்துத் திரும்பிய விமானப் பயணத்தில்,
ஈராக் விவகாரம் உட்பட பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு ஒரு மணி நேரத்துக்கு
மேலாக பதிலளித்தபோது இவ்வாறு கருத்து தெரிவித்தார் திருத்தந்தை. நியாயமற்ற அடக்குமுறைகள்
இடம்பெறும் இடங்களில், அநீதியான அடக்குமுறையாளர்களின் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்,
இந்த அநீதிகளை நிறுத்துவதற்கு குண்டு போட வேண்டும், போர் தொடுக்க வேண்டும் என நான் கூறவில்லை
என்றும், இந்த வன்முறையையும், வன்முறையாளர்களையும், எப்படி ஒடுக்குவது என்பது குறித்து
ஒரு தனிப்பட்ட நாடு மட்டும் தீர்மானிக்கக் கூடாது என்றும் திருத்தந்தை கூறினார். இரு
கொரிய நாடுகள் ஒன்றிணைவதற்கான சாத்தியக் கூறுகள், அல்பேனியத் திருப்பயணம், எல் சால்வதோர்
பேராயர் ஆஸ்கார் ரொமேரோ அவர்களுக்கு அருளாளர் பட்டம் உட்பட பல விவகாரங்கள் பற்றிய கேள்விகளுக்கு
பதிலளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.