ஆகஸ்ட் 12, அகில உலக இளையோர் நாளையொட்டி ஐ.நா. பொதுச்செயலர் வெளியிட்டுள்ள செய்தி
ஆக.13,2014. மனநல பாதிப்புடன் வாழும் இளையோர் தங்களை மறைத்துக்கொள்ள போடும் திரைகளை
அகற்ற ஐ.நா.அவை விழைகிறது என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள் கூறினார். ஆகஸ்ட்
12, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்ட அகில உலக இளையோர் நாளையொட்டி செய்தி வெளியிட்டுள்ள
பான் கி மூன் அவர்கள், மனநல பாதிப்புடன் வாழும் இளையோரை தன் செய்தியின் மையப் பொருளாக்கினார். நியூயார்க்
நகரில் அமைந்துள்ள ஐ.நா.அவையின் தலைமையகத்தில் கொண்டாடப்பட்ட அகில உலக இளையோர் நாளுக்கென,
"மனநலம் முக்கியமான ஒரு விடயம்" (Mental Health Matters) என்பது மையக்கருத்தாக அமைந்தது. மில்லென்னிய
இலக்குகளை அடைய இன்னும் 500 நாட்களே எஞ்சியுள்ளன என்று குறிப்பிட்ட ஐ.நா. பொதுச்செயலர்
பான் கி மூன் அவர்கள், இவ்விலக்குகளை அடைய இளையோரின் துணை இவ்வுலகிற்கு மிகவும் அவசியம்
என்று வலியுறுத்தினார். மொஸாம்பிக் நாட்டிலிருந்து வந்திருந்த Raquelina Langa என்ற
இளம்பெண் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அவர்களின் சிறப்பு விருந்தினராக, இவ்விழாவில்
கலந்துகொண்டார்.