ஆக.12,2014. தென்கொரியாவில் தான் மேற்கொள்ளும் 5 நாள் திருப்பயணத்தையொட்டி இப்புதனன்று
மாலை உரோம் நகரிலிருந்து புறப்படுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்தாலிய நேரம் புதன்
மாலை 4 மணிக்கு அதாவது இந்திய நேரம் மாலை 7.30 மணிக்கு புறப்படும் ஆலித்தாலியா விமானம்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை சுமந்துகொண்டு, மறுநாள் காலை தென் கொரிய நேரம் 10.30
மணிக்கு தலைநகர் Seoulஐ அடைவதிலிருந்து அந்நாட்டிற்கான திருத்தந்தையின் திருப்பயணம் துவங்குகிறது. ஆசிய
இளையோர் மாநாட்டையொட்டி இங்கு திருப்பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ், கொரியாவின்
பல்வேறு மதப்பிரதிநிதிகளைச் சந்திப்பதோடு, ஆசிய ஆயர்களையும் சந்தித்து உரையாடுவார். கொரியாவின்
124 மறைசாட்சிகளை அருளாளர்களாக அறிவிப்பதும் இத்திருப்பயணத்தில் சனிக்கிழமையன்று இடம்பெறும்.
தன் திருப்பயணத்தின் இறுதி நாளான திங்களன்று, கொரியாவின் அமைதி மற்றும் ஒப்புரவிற்கென
அந்நாட்டு ஆயர்கள் அனைவருடன் இணைந்து திருப்பலி நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.