பெரும்பான்மை மதத்தவரும் சிறுபான்மை மதத்தவரும் ஒன்றிணைந்து வாழ்ந்த பெருங்கொடையை இழந்து
நிற்பது பாவம்
ஆக. 11, 2014. ஈராக்கில் துன்புறும் மக்கள் மத்தியில் சென்று அவர்களின் துன்பங்களோடு
பங்கெடுக்க விரும்பும் திருத்தந்தை, தன் பிரதிநிதியாக அப்பகுதிக்கு தன்னை அனுப்பியுள்ளதாக
இஞ்ஞாயிறன்று திருப்பீடத்தில் திருத்தந்தையை சந்தித்ததையொட்டி பத்திரிகையாளர்களிடம் கூறினார்
கர்தினால் ஃபெர்னாண்டோ ஃபிலோனி. ஈராக்கின் துன்பநிலைகள் குறித்து பலமுறை தன் கவலையை
திருத்தந்தை வெளியிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நற்செய்தி அறிவிப்புப் பேராயத்தின் தலைவர்
கர்தினால் ஃபிலோனி அவர்கள், பெரும்பான்மையினராக வாழும் இஸ்லாமியர்களுடன் ஒற்றுமையாக வாழ்ந்து
வந்த சிறுபான்மையினரான ஈராக் கிறிஸ்தவர்கள், தற்போது தாங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக
வாழ்ந்து வந்த இடங்களைவிட்டு வெளியேற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார். பெரும்பான்மை
மதத்தவரும் சிறுபான்மை மதத்தவரும் ஒன்றிணைந்து வாழ்ந்த பெருங்கொடையை தற்போது இழந்து நிற்பது
பாவமாகும் எனவும் கூறினார் கர்தினால். கிறிஸ்தவர்களுக்கு நம்பிக்கையை வழங்கவும், அவர்களின்
வருங்கால வாழ்வுக்கு ஈராக் அரசு உறுதி வழங்கும் என்ற நம்பிக்கையுடனும் ஈராக் நாட்டிற்கு
தான் திருத்தந்தையின் பிரதிநிதியாக பயணம் மேற்கொள்வதாக தெரிவித்தார் கர்தினால் ஃபிலோனி.