சிறார் சட்டத்தில் திருத்தம்: 'யுனிசெப்' கடும் கவலை
ஆக. 11, 2014. சிறார் சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான இந்திய அரசின் அறிவிப்புக்கு,
'யுனிசெப்' கவலை தெரிவித்துள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்துவதற்காக
எடுக்கும் சில நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சிறார் சட்டத்தில் திருத்தம் செய்யப் போவதாகவும்,
சிறாருக்கான வயது வரம்பை, தற்போதுள்ள, 18லிருந்து, 16 ஆக குறைக்கப் போவதாகவும் இந்திய
அரசு அறிவித்துள்ளதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிதியகம், 'யுனிசெப்' கவலையை
வெளியிட்டுள்ளது. சிறார் வயது வரம்பு என்பது, 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சிந்தனை
திறன் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை ஆய்வு செய்து, சர்வதேச நெறிமுறைகளுக்கு உட்பட்டு, வகுக்கப்பட்டுள்ளது,
சிறார் தொடர்பான வழக்குகளை, வழக்கமான வழக்காடுமன்றங்களுக்கு மாற்றி, அவர்களுக்கு கடுமையான
தண்டனை பெற்றுத் தருவதன் மூலம், குற்றங்களை குறைக்க முடியாது என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள்,
ஆய்வு முடிவுகள் உள்ளன எனக்கூறும் 'யுனிசெப்' அமைப்பு, குழந்தைகளை பாதுகாப்பதற்கு கடுமையான
நடைமுறைகளை உருவாக்குவது முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளது.