2014-08-11 16:26:28

ஈரானில் விமானம் விபத்துக்குள்ளானதையொட்டி திருத்தந்தையின் இரங்கல்தந்தி


ஆக. 11, 2014. இஞ்ஞாயிறன்று ஈரானில் உள்நாட்டுப் பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 38பேர் உயிரிழந்தது குறித்து திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிடும் இரங்கல்தந்தி அந்நாட்டு தலத்திருஅவைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரால் திருப்பீடச்செயலர் கர்தினால் பியேத்ரோ பரோலின் அவர்கள், ஈரான் ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் இக்னாசியோ பெதினிக்கு அனுப்பியுள்ள தந்தியில், இவ்விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு திருத்தந்தையின் இதயம் நிறைந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. தங்களால் அன்புச் செய்யப்பட்டவர்களின் இழப்புக் குறித்து துன்புறுவோர்க்கு அதைத் தாங்கும் பலம், ஆறுதல் மற்றும் அமைதியை வழங்கும் இறைவனின் ஆசீருக்கு வேண்டுவதாகவும் திருத்தந்தையின் உறுதி அச்செய்தி வழி தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் தலைநகர் டெஹ்ரானிலிருந்து கிழக்கு நகரான தபாஸ் நோக்கி புறப்பட்ட உள்நாட்டு பயணிகள் விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த 48 பேரில் 38 பேர் உயிரிழந்தனர். ஏனையோர் பலத்த காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வருவதாக ஈரான் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.