பழங்குடி மக்கள் முன்னேற்றத்தின் சக்திமிக்க கிரியா ஊக்கிகள், ஐ.நா.பொதுச் செயலர்
ஆக.09,2014. ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியில் மையமாக இருக்கும் பழங்குடி மக்களுக்கு ஒரு
நலமான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கும் நோக்கத்தில் அவர்களின் உரிமைகளை நாம் பாதுகாக்க
வேண்டுமென வலியுறுத்தியுள்ளார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன். ஆகஸ்ட் 9, இச்சனிக்கிழமையன்று
கடைப்பிடிக்கப்பட்ட, அனைத்துலக பழங்குடி மக்கள் தினத்தை முன்னிட்டு செய்தி வெளியிட்ட
பான் கி மூன் அவர்கள், இம்மக்கள் ஏழ்மையிலும், ஒதுக்கப்பட்டும் வாழ்வதற்கு, இவர்களுக்கு
வரலாற்றில் நடத்தப்பட்ட அநீதிகளே காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். பழங்குடி மக்கள்,
சுயமாக வாழ்வதை உறுதிசெய்யும் உரிமைகளை நிலைநாட்டுவதற்கு அதிகார அமைப்பு முறைகள் தொடர்ந்து
தடைகளை உருவாக்கி வருகின்றன எனவும் பான் கி மூன் கூறியுள்ளார். உலகில் ஏறக்குறைய 90
நாடுகளில் 37 கோடிப் பேர் பழங்குடி மக்கள். இவர்கள், உலகின் ஏழைகளில் 15 விழுக்காட்டினர்.
1982ம் ஆண்டில் ஜெனீவாவில் நடந்த ஐ.நா. கூட்டத்தில் அனைத்துலக பழங்குடி மக்கள் தினம்
உருவாக்கப்பட்டது.