ஈராக்கில் வன்முறையால் துன்புறும் அனைவரையும் பாதுகாக்குமாறு அனைத்துலக சமுதாயத்துக்கு
திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு
ஆக.09,2014. ஈராக்கில் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் வன்முறையால் துன்புறும் அனைவருக்காகச்
செபிக்குமாறும், அனைவரையும் பாதுகாக்குமாறும் அனைத்துலக சமுதாயத்துக்குத் தொடர்ந்து உருக்கமாக
அழைப்புவிடுத்து வருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ். ஐஎஸ்ஐஎஸ் இஸ்லாமியத் தீவிரவாதிகள்,
வட ஈராக்கில் வாழும் கிறிஸ்தவர்களை அச்சுறுத்தி அவர்கள் தங்கள் வீடுகளைவிட்டு கட்டாயமாக
வெளியேற வைத்துள்ளவேளை, இக்கிறிஸ்தவர்கள் மற்றும் அப்பகுதியில் நெருக்கடிகளை எதிர்நோக்கும்
பிற மக்களுக்காகவும் தனது டுவிட்டர் செய்திகளில் இந்நாள்களில் தொடர்ந்து வேண்டுகோள்
விடுத்து வருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ். இச்சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் குறைந்தது நான்கு தடவைகள் எழுதியுள்ள செய்திகளில்,
ஈராக்கில் துன்புறும் மக்களுக்காக, பன்னாட்டு சமுதாயத்தின் உதவிக்கும் செபத்திற்கும்
விண்ணப்பித்துள்ளார். வன்முறையை, வன்முறையால் வெல்ல முடியாது என்று சொல்லி ஆண்டவரே,
எங்களுக்கு அமைதி எனும் கொடையை வழங்கியருளும் என அமைதிக்காகச் செபித்து, அமைதிக்காகச்
செபிக்கவும் எல்லாருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.