எபோலா நோய் பரவல், அனைத்துலக அளவில் எழுந்துள்ள நலப் பிரச்சனை, WHO
ஆக.08,2014. மேற்கு ஆப்ரிக்காவில் எபோலா நோய் பரவி வருவது, அனைத்துலக அளவில் நலவாழ்வு
நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனைத் தடுப்பதற்கு, அனைத்துலக அளவில் ஒருங்கிணைந்த
முயற்சிகள் தேவை எனவும் உலக நலவாழ்வு நிறுவனம் அறிவித்துள்ளது. எபோலா நோய் தொடர்பாக
சுவிட்சர்லாந்து நாட்டில் இரு நாள்கள் அவசரக் கூட்டம் ஒன்றை வல்லுனர்கள் நடத்தியது தொடர்பாக
இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளது WHO நிறுவனம். மேற்கு ஆப்ரிக்காவில் இவ்வாண்டில்
எபோலா நோயால் 930க்கு அதிகமான மக்கள் இறந்துள்ளனர். மேலும், இந்தியாவில் எபோலா வைரஸ்
தாக்கம் இல்லை எனவும், அதனால் மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் மத்திய நலவாழ்வு அமைச்சர்
ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். தேவையில்லாமல் நோய்த் தொற்றுள்ள நாடுகளுக்கு பயணம் செய்வதை
இந்தியர்கள் தவிர்க்குமாறும் நலவாழ்வு அமைச்சகம் கேட்டுள்ளது. நோய்த் தொற்று ஏற்பட்டுள்ள
லைபீரியா உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளில் 45,000 இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பது
குறிப்பிடத்தக்கது.