திருத்தந்தையின் பயணத்தையொட்டி, பிலிப்பின்ஸ் ஆயர் பேரவை வெளியிட்டுள்ள
புதிய வலைத்தளம்
ஆக.06,2014. வருகிற சனவரி 15ம் தேதி முதல், 19ம் தேதி முடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்
பிலிப்பின்ஸ் நாட்டில் மேற்கொள்ளவிருக்கும் மேய்ப்புப்பணி பயணத்தையொட்டி, பிலிப்பின்ஸ்
ஆயர் பேரவை, ஒரு புதிய வலைத்தளத்தை வெளியிட்டுள்ளது. கனிவுள்ள நம் ஆயர் தன் மக்கள்
அண்மையில் அடைந்துள்ள துன்பங்களில் பங்கேற்க வருகிறார் என்ற கருத்தை ஆயர்கள் இவ்வலைத்தளத்தில்
வெளியிட்டுள்ளனர். "கருணையும் கனிவும்" திருத்தந்தையின் வருகை - என்ற தலைப்பில் அண்மையில்
வெளியான இந்த வலைத்தளத்தில், திருத்தந்தையின் பயணத்தையொட்டி வெளியிடப்பட்டுள்ள பாடலும்,
செபமும் இடம்பெற்றுள்ளன. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் இம்மேய்ப்புப்பணி
பயணத்தையொட்டி, பிலிப்பின்ஸ் மக்கள் அதிகநேரம் செபத்தில் ஈடுபடும்படி ஆயர்கள் இந்த வலைத்தளத்தின்
வழியாக அழைப்பு விடுத்துள்ளனர். 1970ம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களும்,
1995ம் ஆண்டு புனிதத் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களும் பிலிப்பின்ஸ் நாட்டுக்குச்
சென்றபின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அந்நாட்டுக்குச் செல்லும் மூன்றாவது திருத்தந்தை
என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.