திருத்தந்தை பிரான்சிஸ் : செல்வங்களைக் குவித்து வைத்தால் அவை ஆன்மாவைத் திருடிவிடும்
ஆக.05,2014. “அரும்பொருள் போன்று செல்வங்களை நீங்கள் குவித்து வைத்தால், அவை உங்கள் ஆன்மாவைத்
திருடிவிடும்” என்று, தனது டுவிட்டர் பக்கத்தில் இச்செவ்வாயன்று செய்தி வெளியிட்டுள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், இஸ்பெயினின் லுசெனாவில், அடைபட்ட துறவு வாழ்வு
வாழ்கின்ற, காலணி அணியாத கார்மேல் சபை அருள்சகோதரிகளை இத்திங்களன்று தொலைபேசியில் அழைத்து
நலம் விசாரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 2013ம் ஆண்டின் நிறைவு நாளில் அவ்வில்லச்
சகோதரிகளைத் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்த திருத்தந்தை, மீண்டும் இத்திங்களன்று
தொலைபேசியில் அழைத்துள்ளார். இத்துறவு இல்லத்தில் அர்ஜென்டீனா நாட்டைச் சேர்ந்த மூன்று
அருள்சகோதரிகள் உள்ளனர். இத்துறவு இல்ல அருள்சகோதரிகள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு,
கடந்த 15 ஆண்டுகளாகத் தெரியும்.