2014-08-05 15:50:22

திருத்தந்தை சாரணர் இயக்கத்தினரிடம் : வாழ்வில் பார்வையாளர்களாக இல்லாமல் செயல்படுபவர்களாக இருங்கள்


ஆக.05,2014. ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் பார்வையாளர்களாக இல்லாமல், செயல்படுபவர்களாக இருக்குமாறு, ஆயிரக்கணக்கான ஐரோப்பிய இளம் சாரணர் இயக்கத்தினரிடம் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிரான்சில் நடக்கும் ஐரோப்பிய இளம் சாரணர் இயக்க மாநாட்டில் கலந்துகொள்ளும், ஏறக்குறைய இருபது நாடுகளின் 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியருக்குச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை இவ்வாறு கேட்டுள்ளார்.
இயேசுவை நீங்கள் அறிவதற்கு முதலில், நீங்கள் அவரை அறிவதற்கு முயற்சிக்க வேண்டும் என்றும், இறைவார்த்தை மற்றும் திருவருள்சாதனங்கள் வழியாக இயேசுவைச் சந்திக்க முடியும் என்றும் இளம் சாரணர் இயக்கத்தினருக்கு அனுப்பியுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
கிறிஸ்தவ விழுமியங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் எதிர்கொள்ளும் சவால்களைச் சந்திப்பதற்கு அஞ்சவேண்டாமெனவும் அச்செய்தியில் கேட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பிரான்சின் நார்மாண்டி மாநிலத்தில் Saint-Evroult-Notre-Dame-Du-Bois என்ற நகரில் நடக்கும் நான்காவது அனைத்துலக இளம் சாரணர் இயக்க மாநாடு இம்மாதம் 10ம் தேதியன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.