உலகில் கொடுமைப்படுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்காக இத்தாலிய ஆயர்களின் செப நாள்
ஆக.04,2014. ஈராக், நைஜீரியா போன்ற நாடுகளில் சித்ரவதைப்படுத்தப்படும் கிறிஸ்தவர்களுடன்
ஒருமைப்பாட்டை அறிவிக்கும் விதமாக, இம்மாதம் 15ம் தேதியை செப நாளாக அறிவித்துள்ளது இத்தாலிய
ஆயர் பேரவை. மத நம்பிக்கைகளின் காரணமாக உலகில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் உயிரிழந்து
வருவது குறித்து ஐரோப்பா கவலையற்றதாய், பாராமுகமாய் செயலாற்றுவதாகக் குற்றம்சாட்டும்
இத்தாலிய ஆயர்கள், மனித மாண்பு, உரிமைகள் மற்றும் நாகரீகத்தின் அடிப்படை மீது இடம்பெறும்
இத்தாக்குதல் குறித்து தாங்கள் அமைதி காக்க முடியாது என தெரிவித்துள்ளனர். தான் பிறந்த
பகுதியிலிருந்து கிறிஸ்தவம், முழுமையாகக் காணாமல்போகும் அபாயம் உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி
கவலையை வெளியிடும் ஆயர்கள், மத்தியக்கிழக்குப் பகுதியில், மத தீவிரவாதத்தால் கோவில்களும்,
கிறிஸ்தவக் கலாச்சாரமும் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன எனவும் உரைத்துள்ளனர்.