திருத்தந்தை பிரான்சிஸ் : இறைவனின் இடத்தை அடிக்கடி எடுத்துக்கொள்ளும் பணமும் அதிகாரமும்
போலியான தெய்வங்கள்
ஆக.02,2014. “நாம் இறைவனை வணங்காதபோது வேறு எதையோ நாம் வணங்குகின்றோம். இறைவனின் இடத்தை
அடிக்கடி எடுத்துக்கொள்ளும் பணமும் அதிகாரமும் போலியான தெய்வங்கள்” என்ற குறுஞ்செய்தியை
தனது டுவிட்டரில் இச்சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும்,
இயேசு சபை புனிதர் பீட்டர் ஃபேபர் திருவிழாவை முன்னிட்டு ஐரோப்பிய இயேசு சபை இளம் துறவியருக்கு
இச்சனிக்கிழமையன்று திருப்பலி நிகழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். பிரான்சின் Villaret
ல் 1506ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி பிறந்த புனிதர் பீட்டர் ஃபேபர், 1546ம் ஆண்டு ஆகஸ்ட்1ம்
தேதி உரோமையில் காலமானார். இயேசு சபையை நிறுவிய புனித இலொயோலா இஞ்ஞாசியாரின் முதல் குழுவில்
இருந்த புனிதர் பீட்டர் ஃபேபர், இயேசு சபையில் அருள்பணியாளராக முதலில் திருநிலைப்படுத்தப்பட்டவர்.
இப்புனிதர், 1872ம் ஆண்டில் திருத்தந்தை 9ம் பத்திநாதர் அவர்களால் அருளாளராக அறிவிக்கப்பட்டார்.
இவர் 2013ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனிதராக
உயர்த்தப்பட்டார்