2014-08-01 15:53:19

திருத்தந்தையின் அல்பேனியத் திருப்பயண விபரங்கள் வெளியீடு


ஆக.01,2014. வருகிற செப்டம்பரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அல்பேனியாவுக்கு மேற்கொள்ளவிருக்கும் திருப்பயணம் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது திருப்பீடம்.
வருகிற செப்டம்பர் 21ம் தேதி ஞாயிறு காலை 7.30 மணிக்கு உரோம் பன்னாட்டு விமானநிலையத்திலிருந்து புறப்படும் திருத்தந்தை, அல்பேனியத் தலைநகர் திரானா “அன்னைதெரேசா” அனைத்துலக விமானநிலையத்தை காலை 9 மணிக்குச் சென்றடைவார். அங்கு அல்பேனியப் பிரதமர் Edi Rama, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வரவேற்பார்.
பின்னர் அல்பேனிய அரசுத்தலைவர் மாளிகையில் அரசுத்தலைவர் Bujar Nishani அவர்களை, மரியாதை நிமித்தம் சந்தித்த பின்னர், அரசு அதிகாரிகளைச் சந்திப்பார் திருத்தந்தை.
திரானா “அன்னைதெரேசா” வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றிய பின்னர், அந்நாட்டு ஆயர்களுடன் திருப்பீடத் தூதரகத்தில் மதிய உணவு அருந்துவார் திருத்தந்தை.
மாலையில் கத்தேலிக்கப் பல்கலைகழகத்தில் பல்வேறு சமய மற்றும் கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளைச் சந்தித்தல், பெத்தானியா மையத்தில் பிறரன்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்தல் போன்ற நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் அன்று இரவு 9.30 மணியளவில் வத்திக்கான் திரும்புவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அல்பேனிய நாட்டுக்கான இத்திருப்பயணம், அல்பேனியாவுக்கு ஒரு திருத்தந்தை மேற்கொள்ளும் 2வது திருப்பயணமாகும். ஏற்கனவே, 1993ம் ஆண்டில் திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்கள் அல்பேனியாவுக்குத் திருப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.