திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்காக ஆசியா காத்திருக்கிறது, கர்தினால் தாக்லே
ஆக.01,2014. ஆசியாவில் கத்தோலிக்கர்கள் மற்றும் பிற கிறிஸ்தவ சபையினரின் உள்ளங்களை மட்டுமல்லாமல்,
பிற மதத்தவரையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கவர்ந்துள்ளார் என்று மனிலா கர்தினால்
லூயிஸ் அந்தோணியோ தாக்லே அவர்கள் கூறினார். இம்மாதம் 14 முதல் 18 வரை திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும் தென் கொரியத் திருப்பயணம் குறித்த உணர்வுகளை
வத்திக்கான் வானொலியில் பகிர்ந்துகொண்ட கர்தினால் தாக்லே அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்களின் எளிமையும் நேர்மையும் நிறைந்த வாழ்வும், அவரது போதனைகளும் ஆசிய மக்களின் உள்ளங்களை
வெகுவாய்க் கவர்ந்துள்ளன என்றும் கூறினார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆசியத்
திருஅவைகளைச் சந்திப்பதற்கு மிகுந்த ஆவல் கொண்டிருப்பதை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்
என்றும், திருத்தந்தை கலந்துகொள்ளும் ஆறாவது ஆசிய இளையோர் தின நிகழ்வுகள், இளையோரை விசுவாசத்தில்
ஆழப்படுத்துவதாக அமையும் என்றும் கூறினார் கர்தினால் தாக்லே. மேலும், திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள், 2015ம் ஆண்டு சனவரியில் இலங்கைக்கும், பிலிப்பீன்சுக்கும் திருப்பயணம்
மேற்கொள்ளவுள்ளார் என்பதையும் குறிப்பிட்டார் கர்தினால் தாக்லே.