மனித வர்த்தகத்திற்கு எதிராக ஐ.நா. கடைபிடித்த முதல் உலக நாள்
ஜூலை,31,2014. மனித வர்த்தகத்திற்கு எதிராக நாம் கடைபிடிக்கும் இந்த முதல் உலக நாள்,
இக்கொடுமையை நீக்கும் செயல்களில் நம்மை ஈடுபடுத்த ஒரு தூண்டுகோலாக அமையட்டும் என்று ஐ.நா.
பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள் கூறினார். ஜூலை 30, இவ்வியாழனன்று, மனித வர்த்தகத்திற்கு
எதிரான உலக நாள் ஐ.நா.அவையால் முதல்முறையாகக் கடைபிடிக்கப்பட்டதையொட்டி, பான் கி மூன்
அவர்கள் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார். நாம் வாழும் இன்றைய உலகில் மனித வர்த்தகம்
புதுவகை அடிமைத்தனம் என்று கூறிய பான் கி மூன் அவர்கள், இந்த அடிமைத்தனத்தால் அதிகம்
பாதிக்கப்படுபவர்கள் பெண்களும், குழந்தைகளுமே என்று தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். பாலியல்
வர்த்தகம், ஊதியம் வழங்காத இல்லப் பணிகள், தர்மம் கேட்கும் தொழில் என்ற மூவகைக் கொடுமைகளில்
பெண்களும், குழந்தைகளும் வாழ்நாள் முழுவதும் சிக்கிக்கொள்ளும் அவலம் தொடர்கிறது என்று,
ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் தலைவர், நவி பிள்ளை அவர்கள் கூறினார். மனித வர்த்தகம்
என்ற கொடுமையால், 25 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. அறிக்கையொன்று
கூறுகிறது.