கந்தமால் பகுதியிலிருந்து, மும்பை நகரில் கொத்தடிமைகளாக விற்கப்பட்டிருந்த
ஒன்பது பெண்கள் அருள் சகோதரிகளால் மீட்பு
ஜூலை,30,2014. ஒடிஸ்ஸா மாநிலத்தில், வன்முறைகளுக்கு உள்ளான கந்தமால் பகுதியிலிருந்து,
மும்பை நகரில் கொத்தடிமைகளாக விற்கப்பட்டிருந்த ஒன்பது பெண்களை அருள் சகோதரிகள் சிலர்
மீட்டு, மீண்டும் அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர். தூய ஆவியார் துறவுச்
சபையைச் சேர்ந்த அருள் சகோதரி ஜூலி அவர்களும், பெத்தனி அருள் சகோதரி Violet அவர்களும்
இணைந்து, மும்பையின் Panvel பகுதியில் பணியாற்றும் அருள் பணியாளர் ஒருவருடன் இணைந்து
மேற்கொண்ட இந்த முயற்சியில், 200 பெண்கள் மீட்கப்பட்டனர் என்று UCAN செய்திக் குறிப்பு
கூறுகிறது. Panvel பகுதியில் அமைந்துள்ள ஒரு மீன் தொழிற்சாலையில் கொத்தடிமைகளாகப்
பணியாற்றிவந்த இந்த 200 பெண்களில், 97 பெண்கள் சிறுமிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தொழிற்சாலையின்
பொறுப்பாளர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், விடுவிக்கப்பட்ட பெண்கள்,
ஒடிஸ்ஸா, தமிழ் நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் என்றும்
UCAN செய்திக் குறிப்பு கூறுகிறது.