ஈராக்கிலிருந்து கிறிஸ்தவர்கள் வெளியேற மீண்டும் அச்சுறுத்தல்
ஜூலை,29,2014. ஈராக்கில் இஸ்லாம் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் வடபகுதியிலிருந்து
கிறிஸ்தவர்கள் அனைவரும் வெளியேறவேண்டும், இல்லையெனில் வாளுக்கு இரையாவார்கள் என மீண்டுமொருமுறை
எச்சரித்துள்ளனர் தீவிரவாதிகள். எண்ணற்றோர் வெளியேறியுள்ள நிலையிலும், பெருமளவானோர்
கொலைச் செய்யப்பட்டுள்ள நிலையிலும், அப்பகுதியில் இரண்டு இலட்சம் கிறிஸ்தவர்களின் வருங்காலம்
குறித்து கவலையை வெளியிட்டுள்ளனர் அப்பகுதி கிறிஸ்தவத் தலைவர்கள். ஏற்கனவே மோசுல்
பகுதியிலுள்ள கிறிஸ்தவ வீடுகள் சிகப்புக் குறியிடப்பட்டு, 'வெளியேறுங்கள் அல்லது சிறப்பு
வரி கட்டுங்கள், இல்லையெனில் வாளுக்கு இரையாவீர்கள்' என இஸ்லாம் தீவிரவாதிகளால் அச்சுறுத்தல்
வழங்கப்பட்டுள்ளதாக Human Rights Watch என்ற மனித உரிமைகள் அமைப்பு தெரிவிக்கிறது. ஈராக்கின்
மோசுல் பகுதியில் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக, அதாவது இஸ்லாம் மதம் உருவாவதற்கும் 600
ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பது உண்மை.