2014-07-25 15:46:41

திருத்தந்தை பிரான்சிஸ், மிரியம் இப்ராஹிம் சந்திப்பு


ஜூலை,25,2014. சூடானில் ஒரு கிறிஸ்தவரை திருமணம் செய்ததற்காக கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட சூடான் நாட்டுத் தாய் ஒருவரை, இவ்வியாழனன்று வத்திக்கானில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
27 வயதாகும் Meriam Yahia Ibrahim Ishag என்ற பெண், தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் சாந்தா மார்த்தா இல்லத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து ஆசீர் பெற்றார்.
மிரியம் இப்ராஹிம் அவர்களின் துணிச்சலுடன்கூடிய சாட்சியம் நிறைந்த விசுவாச வாழ்வுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நன்றி சொல்லி பாராட்டினார் என்று, திருப்பீடத்தின் செய்தித் தொடர்பாளர் இயேசு சபை அருள்பணியாளர் பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் கூறினார்.
தனது கிறிஸ்தவ விசுவாசத்துக்காக பல மாதங்கள் சிறையில் இருந்த மிரியம் அவர்களின் சிறிய குடும்பம் இத்தாலிய அரசு விமானத்தில் இவ்வியாழனன்று உரோம் வந்தடைந்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.