2014-07-23 15:46:02

மிலான் பேராயர் கர்தினால் Angelo Scolaவின் இரமதான் செய்தி


ஜூலை,23,2014. "வன்முறையை வன்முறையால் வெல்லமுடியாது, வன்முறையை சமாதானத்தால் மட்டுமே வெல்லமுடியும்" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளதையே என் இரமதான் செய்தியாக வழங்க விழைகிறேன் என்று மிலான் பேராயர் கர்தினால் Angelo Scola அவர்கள் கூறியுள்ளார்.
இரமதான் மாத இறுதியில் கொண்டாடப்படும் Id al Fitr திருவிழாவையொட்டி, மிலான் உயர்மறைமாவட்டத்தில் வாழும் இஸ்லாமியருக்கு தன் செய்தியை வெளியிட்டுள்ள கர்தினால் Scola அவர்கள், மத்தியக் கிழக்குப் பகுதியின் அமைதிக்கென அனைவரும் செபிக்கவேண்டும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் சொந்த நாடுகளைவிட்டு மிலான் பகுதியில் பணியாற்றும் இஸ்லாமியரைச் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ள கர்தினால் Scola அவர்கள், இஸ்லாமியரின் சொந்த நாடுகளில் நிலையான அரசியல், பொருளாதார வளர்ச்சி ஆகியவை உருவாகவேண்டும் என்ற தன் ஆவலை வெளியிட்டுள்ளார்.
இரமதான் மாத நிறைவையொட்டி, Turin உயர் மறைமாவட்டத்தின் பேராயர் Cesare Nosiglia அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் ஒருவரை ஒருவர் மதிப்புடன் நடத்தும் கலாச்சாரத்தை உருவாக்குவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.