2014-07-23 15:45:23

உரோம் நகரில் திருஅவையின் இயக்கங்களின் மூன்றாவது உலக மாநாடு


ஜூலை,23,2014. பொது நிலையினர் பணிக்கென உருவாக்கப்பட்டுள்ள திருப்பீட அவை, திருஅவையின் இயக்கங்கள் மற்றும் புதிய குழுமங்கள் ஆகியவை இணைந்து வரும் மூன்றாவது உலக மாநாட்டை, வருகிற நவம்பர் மாதம் 22ம் தேதி முதல் 24ம் தேதி முடிய உரோம் நகரில் நடத்த தீர்மானித்துள்ளது.
"நீங்கள் திருஅவைக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு கொடை. எனவே, நற்செய்தியின் சக்தியை முன்னெடுத்துச் செல்லுங்கள், அஞ்சாதீர்கள்" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கடந்த ஆண்டு தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவன்று திருஅவையின் இயக்கங்களுக்கு விடுத்த செய்தியைத் தொடர்ந்து, இந்த இயக்கங்களில் பெரும் ஆர்வம் உருவாகியுள்ளதாக பொதுநிலையினர் திருப்பீட அவை கூறுகிறது.
"நற்செய்தியின் மகிழ்வு" என்ற தலைப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள திருத்தூது அறிவுரையிலும் திருஅவையின் இயக்கங்கள் குறித்து கருத்துக்கள் வெளியிட்டிருப்பது, இவ்வியக்கங்களுக்கு பெரும் உந்துதலாக அமைந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
"நற்செய்தியின் மகிழ்ச்சி: மறைபரப்புப்பணியின் மகிழ்ச்சி" என்ற தலைப்பில் நவம்பர் மாதம் கூடவிருக்கும் இம்மாநாட்டில், உலகின் பல நாடுகளில் பணியாற்றும் 55 திருஅவை இயக்கங்களும், 30க்கும் மேற்பட்ட புதிய குழுமங்களும் பங்கேற்க உள்ளன என்று பொதுநிலையினர் திருப்பீட அவை அறிவித்துள்ளது.

ஆதாரம் : VIS








All the contents on this site are copyrighted ©.