2014-07-23 15:46:16

இஸ்ரேல், பாலஸ்தீன நாடுகளின் தலைவர்கள், அமைதியின் சக்தியை அறியாதவர்கள் - முதுபெரும் தந்தை, Michel Sabbah


ஜூலை,23,2014. இஸ்ரேல், பாலஸ்தீன நாடுகளில் உள்ள தற்போதையத் தலைவர்கள், கொல்லும் ஆயுதங்களின் சக்தியை உணர்ந்தவர்கள், அமைதியின் சக்தியை அறியாதவர்கள் என்று எருசலேமில் வாழும் இலத்தீன் வழிபாட்டு முறை முன்னாள் முதுபெரும் தந்தை, Michel Sabbah அவர்கள் கூறியுள்ளார்.
தற்போது காசா பகுதியில் நடப்பது போர் அல்ல, மாறாக, அது வெறித்தனமான கொலை என்று Fides செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் கூறிய முதுபெரும் தந்தை Sabbah அவர்கள், இந்த வெறி, இங்கு ஏற்கனவே நிலவும் வெறுப்புணர்வை இன்னும் ஆழப்படுத்தும் என்பதை வலியுறுத்தினார்.
கடந்த அறுபது ஆண்டுகளாக போர்களையும், போர்கருவிகளையும் நம்பி, சமாதானத்தை நிலைநாட்ட இவ்விரு நாடுகளும், ஏனைய நாடுகளும் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோற்றுப்போயின என்று சுட்டிக்காட்டிய முதுபெரும் தந்தை Sabbah அவர்கள், பாலஸ்தீன நாட்டிற்கு தனி அரசு என்ற முழு உரிமையை வழங்கும்வரை இந்தப் பிரச்சனை தீராது என்பதையும் குறிப்பிட்டார்.
இப்பகுதியில் முழுமையான அமைதி நிலவ, அடுத்த தலைமுறையை நம்பி இருக்கவேண்டும் என்றும், தற்போதையத் தலைவர்களுக்கு சமாதானப் பாதையில் நம்பிக்கை இல்லை என்பதையும் முதுபெரும் தந்தை Sabbah அவர்கள் வருத்தத்துடன் கூறினார்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.