சிரிய கத்தோலிக்க முதுபெரும் தலைவருடன் திருத்தந்தை தொலைபேசி உரையாடல்
ஜூலை,22,2014. ஈராக்கின் மோசூலிலிருந்து கிறிஸ்தவர்கள் விரட்டப்படுவது குறித்து தான்
ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும், அவர்களோடு ஒன்றித்திருப்பதாகவும், சிரிய வழிபாட்டுமுறை
முதுபெரும் தலைவர் மூன்றாம் Ignatius Youssef Younanடன் தொலைபேசி வழி உரையாடியுள்ளார்
திருத்தந்தை பிரான்சிஸ். ஒன்பது நிமிடங்கள் நீடித்த இந்தத் தொலைபேசி உரையாடல் குறித்து
பத்திரிகையாளர்களிடம் தெரிவித்த முதுபெரும் தலைவர் Younan, மதத்தின் அடிப்படையில் மக்கள்
விரட்டப்படுவது உடனடியாக நிறுத்தப்படுமாறு உலகத் தலைவர்கள் முயற்சிக்க வேண்டும் என திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்களிடம் கேட்டுக்கொண்டதாகக் கூறினார். இத்தகைய தாக்குதல்கள் மற்றும்
துன்பங்கள் மத்தியிலும் இந்த நாகரீக உலகின் மௌனம் குறித்து ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார்
முதுபெரும் தலைவர். தன் தொலைபேசி உரையாடலின்போது, மத்தியக்கிழக்குப் பகுதியின் அனைத்துக்
கிறிஸ்தவர்களுக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியதாகவும்
கூறினார் சிரிய வழிபாட்டுமுறை முதுபெரும் தலைவர் Younan.