ஜூலை,22,2014. ஒவ்வொரு நாளும் காசா பகுதியில் 100 பேர், அதிலும் குறிப்பாக பெண்களும்,
குழந்தைகளும், முதியோரும் பலியாகிவருவதாக யெருசலேமின் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு
தன் கவலையை வெளியிட்டுள்ளது. ஏறத்தாழ 20,000 வீடுகள் காசா பகுதியில் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும்,
1 இலட்சத்து 20,000 பேர் 56 பள்ளிகளில் அடைக்கலம் தேடியுள்ளதாகவும் உரைத்த யெருசலேம்
காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர் அருள்பணி Raed Abusahlia, 360 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில்
ஏறத்தாழ 17 இலட்சம் பேர் கடந்த 14 நாட்களாக இஸ்ரேல் துருப்புகளின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு
அச்சத்துடன் வாழ்வதாகவும் கூறினார். காசாவில் குடிநீர் தட்டுப்பாடு, மின்சாரமின்மை,
மருத்துவமனைகளில் வசதிகளின்மை போன்றவைகளால் மக்கள் எண்ணற்ற துன்பங்களை அனுபவித்து வருவதாகவும்
கூறினார் காரித்தாஸ் இயக்குனர். ஆயுதங்களின் இரைச்சல் நிறுத்தப்படுவதுடன், துன்புறும்
மக்களைக் காப்பாற்ற அண்டை நாடுகளின் எல்லைகள் திறக்கப்படவேண்டும் என்ற அருள்திரு Abusahlia,
முதலில் மோதல்களுக்கான காரணங்கள் அகற்றப்படவேண்டும் எனவும் கூறினார்.