திருஅவையின் பணிகளுக்கு கென்ய அரசுத் தலைவரின் மனைவி பாராட்டு
ஜூலை,21,2014. கென்யாவில் பல இலட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில்
கத்தோலிக்கத் திருஅவை சிறப்புப் பங்காற்றியுள்ளதாக அந்நாட்டு அரசுத்தலைவரின் மனைவி தன்
பாராட்டுக்களை வெளியிட்டுள்ளார். நல ஆதரவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இளையோர் கல்வி
போன்றவற்றில் திருஅவையின் பங்களிப்பு முக்கியமானது என தெரிவித்த திருமதி Margaret Kenyatta
அவர்கள், மனித குல முன்னேற்றத்திற்காக திருஅவை செயல்படுத்திய திட்டங்களும் முயற்சிகளும்
அரசுத் திட்டங்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளன எனவும் கூறினார். கென்யாவில் கத்தோலிக்க
திருஅவை 4169 பாலர் பள்ளிகள், 4769 துவக்கப் பள்ளிகள், 1618 இடைநிலை மற்று உயர்நிலைப்
பள்ளிகள், 184 மருத்துவமனைகள், 390 சிறு மருத்துவ மையங்கள், 22 தொழுநோயாளர் இல்லங்கள்,
86 முதியோர் பராமரிப்பு இல்லங்கள், 401 கைவிடப்பட்ட சிறார் காப்பகங்கள் போன்றவற்றை நடத்துகிறது.