இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் 550 குளங்களைக் 'காணவில்லை'
ஜூலை,21,2014. இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்பட்ட 700க்கும் மேற்பட்ட சிறியளவான
நீர்ப்பாசன குளங்களில் தற்போது 30 விழுக்காட்டு குளங்கள் மட்டுமே அதிகாரபூர்வ பதிவேடுகளில்
காணப்படுவதாக மாவட்டச் சுற்றுச்சூழல் மற்றும் நீர்வள தினைக்களம் கூறுகின்றது. சில
பகுதிகளில் குளங்கள் மண் போட்டு நிரப்பப்பட்டு மக்கள் குடியிருப்புகளும் அரசுக்குச் சொந்தமான
கட்டிடங்களும் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாவட்டச் சுற்றுச்சூழல்
மற்றும் நீர்வளச் சேவைகள் உதவி ஆணையரின் தகவல்களின் படி, 1976-ம் ஆண்டுக்கு முன்னர் 786
சிறிய நீர்ப்பாசன குளங்கள் பதிவேடுகளில் இருந்துள்ளன. ஆனால், தற்போதைய அதிகாரபூர்வ பதிவேடுகளின்
படி இந்த எண்ணிக்கை 233 ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பதிவேடுகளில்
தற்போது காணாமல்போயுள்ள குளங்களில் 100-க்கும் மேற்பட்டவை மண் போட்டு நிரப்பப்பட்டு மக்கள்
குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் சுற்றுச்சூழல் மற்றும்
நீர்வள உதவி ஆணையர் சிவலிங்கம் கூறினார். குளங்கள் தொடர்ந்தும் மண் போட்டு நிரப்பப்படுமானால்
மக்களும் விவசாயிகளும் கால்நடைகளும் கடும் வறட்சியை எதிர்நோக்க நேரிடும் என்றும் அவர்
எச்சரித்தார்.