உலகின் எய்ட்ஸ் நோயாளிகளில் 25 விழுக்காட்டினருக்கு கத்தோலிக்கத் திருஅவை உதவி
ஜூலை,19,2014. ‘விசுவாசத்தை ஆழப்படுத்த’ எனும் தலைப்பில் ஆஸ்திரேலியாவின் மெல்பெர்ன்
நகரில் எய்ட்ஸ் நோய் குறித்த அனைத்துலக கத்தோலிக்க கருத்தரங்கு ஒன்று இவ்வெள்ளியன்று
தொடங்கியுள்ளது. மெல்பெர்ன் நகரில், ஜூலை 20 இஞ்ஞாயிறு முதல், 6 நாள்களுக்கு நடக்கவுள்ள
எய்ட்ஸ் நோய் குறித்த அனைத்துலக கருத்தரங்குக்கு முன்தயாரிப்பாக, அனைத்துலக காரித்தாஸ்
நிறுவனம், எய்ட்ஸ் நோய் குறித்த அனைத்துலக கத்தோலிக்க கருத்தரங்கை நடத்தி வருகிறது. கத்தோலிக்கப்
பிறரன்பு அமைப்புகளின் பிரதிநிதிகள், கத்தோலிக்க வல்லுனர்கள் என, 25 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள்
கலந்து கொள்ளும் இந்த மூன்று நாள் கருத்தரங்கில், எய்ட்ஸ் நோய் விவகாரம் குறித்த அறநெறிக்
கூறுகளும், இந்நோயாளிகளுக்கு ஆற்ற வேண்டிய ஆன்மீகத் தேவைகளும் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
உலகில் எய்ட்ஸ் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுள் 25 விழுக்காட்டினருக்கு
கத்தோலிக்கத் திருஅவை உதவி வருகின்றது.