இலங்கைத் தமிழர்களின் சுதந்திரமும் மாண்பும் மீறப்படுகின்றன, புத்தமதத் துறவி கண்டனம்
ஜூலை,19, 2014. இலங்கையின் வட பகுதியில் தமிழர்களின் சுதந்திரமும் மாண்பும் மீறப்பட்டு
அழிக்கப்படுவதாக அரசை குற்றம் சாட்டியுள்ளார் அந்நாட்டு புத்தமத துறவி Bendiwewea Diyasena
Thero. இலங்கை அரசின் தமிழர்க்கெதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து இவ்வாரத்தில் யாழ்ப்பாணத்தில்
நடந்த பேரணியில் உரையாற்றிய புத்தமத துறவி Bendiwewea அவர்கள், தமிழர்களின் சுதந்திரத்தையும்
மாண்பையும் மீறும் இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரான தனது கண்டனத்தை வெளியிட்டார். இப்பேரணியில்,
கிறிஸ்தவர், புத்தமதத்தினர், இஸ்லாமியர் என அனைத்து மதங்களின் குருக்கள், துறவிகள், பொதுநிலையினர்,
அரசியல்வாதிகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இப்பேரணியில் பேசிய அருள்பணியாளர்
Reid Shelton Fernando அவர்கள், அரசு ஊடகத்துறையை மௌனப்படுத்துவதோ, மக்கள் அமைதியான நிகழ்வுகளில்
பங்கெடுப்பதைத் தடை செய்வதோ உண்மை உரக்கக் கேட்கப்படாதவாறு தடை செய்ய முடியாது எனக் கூறினார்.