2014-07-18 17:05:23

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அர்ஜென்டீனா கால்பந்தாட்ட வீரர்களின் பரிசு


ஜூலை,18,2014. ஸ்காட்லாந்து நாட்டின் Glasgow நகரில் ஜூலை 23ம் தேதி துவங்கவிருக்கும் 2014ம் ஆண்டின் Commonwealth விளையாட்டுக்களை முன்னிட்டு, Glasgow உயர்மறைமாவட்டம் இவ்வியாழனன்று நடத்திய ஒரு கருத்தரங்கிற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.
"விளையாட்டு எனும் கொடையைக் கொண்டாடுதல்" என்ற மையக்கருத்துடன் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் உரையாற்றிய Glasgow பேராயர் Philip Tartaglia அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விளையாட்டுக்கள் மீது கொண்டுள்ள ஆர்வத்தை உலகறியும் என்று எடுத்துரைத்தார்.
இதற்கிடையே, அண்மையில் நடந்து முடிந்த உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகளில் இரண்டாம் இடத்தைப் பெற்ற அர்ஜென்டீனா அணியைச் சேர்ந்த அனைத்து விளையாட்டு வீரர்களும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு ஒரு சிறப்புச் சீருடையைப் பரிசாக அனுப்பியுள்ளனர்.
இறுதி ஆட்டத்தில் தாங்கள் வெற்றியடையவில்லை எனினும், திருத்தந்தையின் எண்ணங்கள் தங்களுடன் இருந்ததை உணர முடிந்தது என்று கூறிய அணி வீரர்கள், "Albiceleste" என்ற இந்த உடையில், தங்கள் கையெழுத்திட்டு, திருத்தந்தைக்கு தங்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
அர்ஜென்டீனா அணி, பிரேசில் நாட்டில் மேற்கொண்ட பயிற்சி மையத்தில், திருத்தந்தையுடன் தாங்கள் வத்திக்கானில் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் பெரிதாக மாட்டப்பட்டிருந்தது எனவும் வீரர்கள் கூறியுள்ளனர்.

ஆதாரம் : VIS / ICN








All the contents on this site are copyrighted ©.