இஸ்ரேல், பாலஸ்தீனா ஆகிய இரு அரசுகளும் தங்கள் இராணுவத் தாக்குதல்களை
உடனடியாக நிறுத்தவேண்டும் - இந்திய ஆயர் பேரவை வேண்டுகோள்
ஜூலை,16,2014. இஸ்ரேல், பாலஸ்தீனா ஆகிய இரு அரசுகளும் தங்கள் இராணுவத் தாக்குதல்களை உடனடியாக
நிறுத்தவேண்டும் என்று விண்ணப்பத்தை, இந்திய ஆயர் பேரவையின் நீதி அமைதி மற்றும் முன்னேற்றப்
பணிக்குழு விடுத்துள்ளது. இப்பணிக்குழுவின் செயலர் அருள் பணியாளர் சார்ல்ஸ் இருதயம்
அவர்கள் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், கடந்த ஒரு வாரமாக நீடித்துவரும் இந்தத் தாக்குதல்களால்
160க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் என்றும், இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் குழந்தைகள்
என்றும் கூறப்பட்டுள்ளது. காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட தாக்குதல்களால்,
70,000த்திற்கும் அதிகமான மக்கள் மின்சாரம், குடிநீர் ஆகிய இணைப்புக்களை இழந்து தவிக்கின்றனர்
என்பதையும் இந்த விண்ணப்ப அறிக்கை எடுத்துரைக்கிறது. எல்லைப் பகுதியில் இஸ்ரேல் இராணுவக்
குவிப்பு நடைபெறுவதால், அப்பகுதியிலிருந்து 17,000த்திற்கும் அதிகமானோர் தங்கள் இல்லங்களை
விட்டு வெளியேறி, புகலிடம் ஏதுமின்றி அவதியுறுகின்றனர் என்பதையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.