அரசுகளால் நடத்தப்படும் ஒட்டுமொத்த கண்காணிப்பு: ஐநா கவலை
ஜூலை,16,2014. அரசுகள் தங்கள் குடிமக்கள் மீது நடத்தும் ஒட்டு மொத்த கண்காணிப்பு முறைகள்,
தனி நபர்களின் அந்தரங்க உரிமைகளை மீறும், ஆபத்தான ஒரு போக்காக மாறிவருவதாக ஐ.நா அவை எச்சரித்துள்ளது. ஒட்டுமொத்த
கண்காணிப்புகள் மற்றும் தரவுகள் கட்டாயமாக சேமித்து வைக்கப்படவேண்டும் என்ற நிர்ப்பந்தங்கள்
ஆகியவை "தேவையற்றவை மற்றும், அளவுக்கு மீறியவை" என்று வர்ணிக்கும் ஐ.நா அவை அறிக்கை ஒன்று,
இத்தகைய நடவடிக்கைகள் நடுநிலையான அமைப்பால் கண்காணிக்கப்படவேண்டும் என்று கூறியது. பிரிட்டனில்,
உளவுத்துறைகளுக்கு, மக்களின் தொலைபேசி மற்றும் இணையப் பயன்பாடு குறித்த ஆவணங்களைப் பார்வையிட
அனுமதிக்கும் சர்ச்சைக்குரிய அவசர சட்டம் ஒன்றை பிரித்தானிய நாடாளுமன்றம் நிறைவேற்றிய
ஒரு நாளுக்குள் இந்த அறிக்கை பிரசுரமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாதத்தை
ஒடுக்கும் நடவடிக்கைகள் என்ற பெயரால் அரசு மேற்கொள்ளும் இந்தக் கண்காணிப்புகள் அடிப்படை
மனித உரிமைகளையும் , கருத்துச் சுதந்திரத்தையும் அச்சுறுத்தலுக்குள்ளாக்குவதாக ஐ.நா.
கூறுகிறது.