ஈராக்கிலிருந்து கிறிஸ்தவம் காணாமற்போய்விடும் அபாயம் தெரிகின்றது, பேராயர்கள்
ஜூலை,15,2014. ஈராக்கிலிருந்து கிறிஸ்தவர்கள் தொடர்ந்து வெளியேறி வருவதாகவும், கிறிஸ்தவம்
அந்நாட்டிலிருந்து காணாமற்போய்விடும் அபாயம் இருப்பதாகவும் கவலையை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டின்
இரு பேராயர்கள். துருக்கி, சவுதி அரேபியா மற்றும் வட ஆப்ரிக்காவில் கிறிஸ்தவம் காணாமற்போகும்
ஆபத்து இருப்பதாக குறிப்பிட்ட கிர்குக் பேராயர் Yousif Mirkis அவர்கள், லெபனனில் கிறிஸ்தவர்கள்
தற்போது சிறுபான்மையினராக மாறியுள்ளதையும் சுட்டிக்காட்டினார். கடந்த பத்து ஆண்டுகளில்
ஈராக்கில் வன்முறைக்கு ஓர் ஆயரையும், ஆறு அருள்சகோதரிகளையும் ஏறத்தாழ ஆயிரம் பொதுநிலை
விசுவாசிகளையும் இழந்துள்ளதாகவும் கூறினார் பேராயர் Mirkis. வீடுகளையும் வேலைகளையும்
இழந்துள்ள கிறிஸ்தவர்களை நாட்டிற்குள்ளேயே தக்க வைக்க முயல்வது சிரமமாக உள்ளது என எர்பில்
பேராயர் Bashar Warda அவர்களும் தன் கவலையை வெளியிட்டார்.