2014-07-09 16:25:53

இஸ்ரேல், பாலஸ்தீன நாடுகளில் குழந்தைகளை பறிகொடுத்துள்ள அன்னையரின் அழுகுரல் கேட்கின்றது - புனித பூமி ஆயர்கள்


இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளிலும் தங்கள் குழந்தைகளை பறிகொடுத்துள்ள அன்னையர் எழுப்பும் அழுகுரல் கேட்கின்றது என்று புனித பூமியின் கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.
புனித பூமி ஆயர்கள் பேரவையின் நீதி அமைதி பணிக்குழு, ஜூலை 8, இச்செவ்வாயன்று விடுத்துள்ள ஓர் அறிக்கையில், அண்மையில் இவ்விரு நாடுகளுக்கும் இடையே வெடித்துள்ள வன்முறைகளால் அப்பாவி இளையோர் உயிரிழந்துள்ளனர் என்றும், ஊடகங்களின் கவனத்திற்கு வராமல் இறக்கும் பல நூறு மரணங்கள் தொடர்கின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.
துணிவான மாற்றங்களுக்கு அழைப்பு, வன்முறையைத் தூண்டும் மொழி பயன்பாடு, வன்முறை வட்டத்தை உடைத்தல், மாற்றங்கள் நடைபெற மதத் தலைவர்களின் பங்கு என்ற பல தலைப்புக்களில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மதத் தலைவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் மிக ஆழமான தாக்கங்களை உருவாக்கும் சக்தி பெற்றதால், அவர்கள் அமைதியை வளர்க்கும் வார்த்தைகளையே மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று ஆயர்களின் அறிக்கை விண்ணப்பித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.