2014-07-08 16:05:34

வத்திக்கான் வங்கியின் ஆண்டறிக்கை


ஜூலை,08,2014. வத்திக்கான் வங்கி இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களின் கணக்குகளை மூடியிருப்பதாகவும், வத்திக்கான் வங்கியை சீரமைப்பு செய்த பணியில் ஏறக்குறைய மூவாயிரம் வாடிக்கையாளர்களுடன் கொண்டுள்ள உறவுகளும் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் இச்செவ்வாயன்று வெளியிடப்பட்ட அந்த வங்கியின் அறிக்கை கூறுகிறது.
முடிக்கப்பட்டுள்ள மூவாயிரம் கணக்குகளில் ஏறக்குறைய நானூறு கணக்குகளுக்கு மிகச் சிறிய அளவிலே பணம் இருப்பதாகவும், புதிய தலைவர் மற்றும் புதிய நிர்வாக அமைப்பினால் வங்கிக் கணக்குகள் மறு சீரமைப்பு செய்யப்படும் எனவும் அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.
வங்கியில் கணக்கு வைப்பதற்கான விதிமுறைகளுக்கு உட்படாத மேலும் 359 கணக்குகள் முடிக்கப்படவுள்ளன எனவும், இந்த வங்கியில் ஏறக்குறைய 15,500 வாடிக்கையாளர்கள் உள்ளனர் எனவும், இவர்களில் சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் வைத்துள்ளனர் எனவும் அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.
IOR எனப்படும் வத்திக்கான் வங்கிக்கு 2013ம் ஆண்டில் 29 இலட்சம் யூரோக்கள் இலாபம் கிடைத்துள்ளதாகவும், ஆனால் 2012ம் ஆண்டில் இது 8 கோடியே 66 இலட்சம் யூரோக்களாக இருந்ததெனவும் அவ்வறிக்கை கூறுகிறது. மேலும், 2014ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 5 கோடியே 74 இலட்சம் யூரோக்கள் இலாபம் கிடைத்திருப்பதாகவும் வங்கி வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
இதற்கிடையே, முதலீடு நடவடிக்கைகளில் சில முறைகேடுகளை எதிர்நோக்கிய வத்திக்கான் வங்கியை மறுசீரமைப்பு செய்வது குறித்த திட்டத்தை கர்தினால் George Pell அவர்கள் இப்புதனன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.