ஆகாயத் தாமரை செடிகளிலிருந்து டீசல் தயாரிக்கும் இலங்கை
ஜூலை,04,2014. இலங்கையில் நீர் நிலைகளில் வளரும் ஆகாயத் தாமரை செடிகள் மூலம் டீசல் தயாரிக்கும்
முறையை விரைவில் அறிமுகப்படுத்த தயாராக இருப்பதாக, வணிகம் மற்றும் கைத்தொழில் துறை உதவி
அமைச்சர் லக்ஷ்மன் வசந்த பெரேரா தெரிவித்துள்ளார். களுத்துறை நாவுல பகுதியில் இடம்பெற்ற
நிகழ்வு ஒன்றில் பேசும்போது இதனை அறிவித்த பெரேரா அவர்கள், எரிபொருளுக்காக நாட்டில் செலவிடப்படும்
பணத்தைக் குறைப்பதற்காக ஆகாயத்தாமரை செடியில் இருந்து டீசல் தயாரிக்கும் வெற்றிகரமான
முறையை இலங்கையில் அறிமுகப்படுத்த தயாராக இருக்கின்றேன் எனக் கூறினார். நாட்டில்
உள்ள நீர்த்தேக்கங்களில் காணப்படும் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் இவ்வாறான
நீர்ச் செடிகள் மூலம் எரிபொருள் தயாரிக்க முடிந்தால் அது நாட்டின் பொருளாதாரத்திற்கு
முக்கியமானது என, தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். 75 டன் ஆகாயத்தாமரை செடியில்
இருந்து 24 ஆயிரம் லிட்டர் டீசல் தயாரிக்க முடியும்.