2014-07-04 16:03:29

31வது உலக கத்தோலிக்க இளையோர் நாளுக்கான இலச்சினை மற்றும் செபம்


ஜூலை.04,2014. 2016ம் ஆண்டில் போலந்தின் கிராக்கோவ் நகரில் நடக்கவிருக்கும் 31வது உலக கத்தோலிக்க இளையோர் நாளுக்கான அதிகாரப்பூர்வ இலச்சினை மற்றும் செபத்தை இவ்வியாழனன்று வெளியிட்டார் போலந்து கர்தினால் Stanislaw Dziwisz.
இவ்வியாழனன்று கிராக்கோவில் பத்திரிகையாளர் கூட்டத்தில் இவற்றை வெளியிட்டுப் பேசிய கர்தினால் Dziwisz அவர்கள், இந்த உலக நாள் நடக்கும் இடம், அதன் தலைப்பு, அதன் முக்கிய நபர்கள் என, மூன்று சிறப்புக் கூறுகளை இந்த இலச்சினை கொண்டுள்ளது என விளக்கினார்.
இந்த இலச்சினை, இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர் என்ற இந்த உலக நாளின் தலைப்பையும், போலந்தின் வரைபடத்தையும் கொண்டுள்ளது என்றும், அதிலுள்ள மஞ்சள் நிற சிலுவை, இந்த உலக நாளின் இதயமாக விளங்கும் இயேசு கிறிஸ்துவை குறிக்கின்றது என்றும் விளக்கினார் கர்தினால் Dziwisz.
31வது உலக கத்தோலிக்க இளையோர் நாளை, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ உலக கத்தோலிக்கர் இளையோர் தின நிறைவு நாளன்று அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.