பாகிஸ்தானில் சிறுபான்மையினர் உரிமைகளுக்காக தேசிய அவை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பது
வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம்
ஜூன்,25,2014. பாகிஸ்தானில் சிறுபான்மையினர் உரிமைகளுக்காக தேசிய அவை ஒன்று உருவாக்கப்பட
வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம், அந்நாட்டின் சிறுபான்மையினர்க்கு
நம்பிக்கையளிப்பதாய் உள்ளது என பீதெஸ் கத்தோலிக்க செய்தி நிறுவனம் கூறியது. சிறுபான்மையினர்
உரிமைகளுக்காக தேசிய அவை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பாகிஸ்தான்
அரசுக்கு விடுத்துள்ள ஆணையின்படி, தனித்து இயங்கும் இந்த அவை, சிறுபான்மையினர்க்கு எதிரான
வன்முறைகள், பாகுபாடுகள் சிறுபான்மையினரின் இன, சமய நிலைகள் ஆகியவற்றைக் கண்காணிக்கும்.
2013ம் ஆண்டு செப்டம்பரில் பேஷ்வாரில் கிறிஸ்தவ ஆலயம் தாக்கப்பட்டதில் 81 கிறிஸ்தவர்கள்
கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். இவ்வழக்கு குறித்து விசாரணை நடத்தியதன்
பயனாக, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், சிறுபான்மையினர் உரிமைகளுக்காக தேசிய அவை ஒன்று உருவாக்கப்பட
வேண்டும் என்று அரசுக்கு ஆணையிட்டுள்ளது.