2014-06-25 16:47:33

சூடானில் விடுதலை செய்யப்பட்ட கத்தோலிக்கப் பெண் மீண்டும் கைது


ஜூன்,25,2014. சூடானில், மதம் மாறிய குற்றத்துக்காக மரணதண்டனை தீர்ப்பிடப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 26 வயது நிரம்பிய கத்தோலிக்கப் பெண் ஒருவர், இரகசிய காவல்துறையினரால் மீண்டும் குடும்பத்தோடு கைது செய்யப்பட்டுள்ளார் என ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
விடுதலை செய்யப்பட்ட மிரியம் இப்ராஹிம் என்ற பெண்ணை, அவரது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஏறக்குறைய நாற்பது பேர் கொண்ட காவல்துறையினர் விமான நிலையத்தில் கைது செய்தனர் என செய்திகள் மேலும் கூறுகின்றன.
இந்தக் கைதுக்கான காரணத்தை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை எனவும், தற்போது மிரியமும் அவரது குடும்பமும் எங்கே வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரியவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க ஐக்கிய நாட்டு குடிமகன் Daniel Bicensio Wani என்பவரை கடந்த 2011ம் ஆண்டு டிசம்பரில் திருமணம் செய்வதற்கு முன்னர் கத்தோலிக்கராக மாறினார் இப்ராஹிம். இவர்களின் ஒரு வயது ஆண் குழந்தையும் தாயோடு சிறையில் இருந்தது. இப்ராஹிம் கடந்த மே மாதத்தில் ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார்.
சூடான் குற்றவியல் சட்டப்படி, முஸ்லிம்கள் பிற மதத்திற்கு மாறினால் அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இதன்படி இப்ராஹிம் தூக்கிலிடப்பட வேண்டுமென கடந்த மே மாதத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
இதனையொட்டி சூடான் கார்ட்டூம் உயர்மறை மாவட்ட முதன்மை குரு உட்பட அனைத்துலக மனித உரிமை ஆர்வலர்கள் இத்தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு சூடான் அரசைக் கேட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.