"அல்லா" என்ற வார்த்தை முஸ்லிம் கடவுளைக் குறிக்க மட்டுமே – மலேசிய உச்ச நீதிமன்றம்
ஜூன்,23,2014. மலேசியாவில் சிறுபான்மைக் கிறித்தவர்கள் தங்கள் கடவுளைக் குறிக்க 'அல்லா'
என்ற வார்த்தையைப் பயன்படுத்துவற்கு எதிராக உயர்நீதிமன்றம் விதித்த தடையை அந்நாட்டின்
உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. கடவுள் என்ற பொருளில் வழங்கப்படும், அல்லா என்ற
சொல்லை, மலேசியாவில் அனைத்து மதத்தினரும் பயன்படுத்திவந்த நிலையில், அதனை எதிர்த்து எழுந்த
சர்ச்சையை அடுத்து, அரசால் இந்தப் பதத்தை கிறித்தவர்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. இந்த
விவகாரம், கத்தோலிக்கத் திருஅவையின் செய்திப் பத்திரிகையான, 'ஹெரால்ட்' இதழால் 2009ல்
முதலில் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, முதல் நீதிமன்றத்தில் கத்தோலிக்கர்களுக்கு
ஆதரவாகத் தீர்ப்பு வந்த நிலையில் அதை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. உயர்நீதிமன்றத்தின்
தீர்ப்பை எதிர்த்து கத்தோலிக்கர்கள் உச்சநீதிமன்றத்துக்கு மேல் முறையீடு செய்ததைத்தொடர்ந்து,
மலேசிய கத்தோலிக்கர்கள் தொடர்ந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவை நாட்டின் உச்சநீதிமன்ற
நீதிபதிகள் 4- 3 என்ற வாக்குகளில் நிராகரித்து தள்ளுபடி செய்தனர். இந்தத் தீர்ப்பு
தங்களுக்கு ஏமாற்றமளிப்பதாக, ஹெரால்ட் பத்திரிகையின் ஆசிரியர் அருட்திரு இலாரன்ஸ் ஆண்ட்ரூ
கருத்துத் தெரிவித்துள்ளார்.