புனிதரும் மனிதரே - தேவையானதெல்லாம் ஒரு நற்கருணைப் பேழை மட்டுமே
முத்திப்பேறு பெற்ற அன்னை தெரேசாவும் சில சகோதரிகளும் அமெரிக்காவின் San Francisco உயர்மறைமாவட்டத்தில்
உழைக்கச் சம்மதித்தனர். இதைக் கேட்ட பேராயர் John Quinn அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி.
அருள் சகோதரிகள் தங்குவதற்கு அவர் ஒரு வீட்டை ஏற்பாடு செய்திருந்தார். அன்னை தெரேசா அங்கு
வந்தபோது, அந்த வீட்டில் செய்யப்பட்டிருந்த வசதிகளையெல்லாம் பார்த்தார். வீட்டின் தரையில்
விரிக்கப்பட்டிருந்த கம்பளங்களை எடுக்கச் சொன்னார். கதவு, சன்னல்களுக்குப் போடப்பட்டிருந்த
திரைச் சீலைகளை எடுக்கச் சொன்னார். வீட்டிற்குள் வைக்கப்பட்டிருந்த நான்கு அல்லது ஐந்து
தொலைபேசிகளுக்குப் பதில் ஒன்று போதும் என்று சொன்னார். இப்படி ஒவ்வொன்றாக அந்த வசதிகளையெல்லாம்
குறைத்தபின், அன்னையவர்கள் பேராயரிடம், "ஆயரே, இந்த வீட்டில் எங்களுக்கு தேவையானதெல்லாம்
ஒரு நற்கருணைப் பேழை மட்டுமே" என்று சொன்னாராம். இச்சம்பவத்தை பேராயர் John Quinn அவர்கள்,
தன் மறைமாவட்டக் குருக்களுக்கு எடுத்துச்சொல்லி, இயேசுவின் பிரசன்னம் இருந்தால் போதும்
என்று வாழும் வழிகளை அவர்கள் தேடவேண்டும் என்று வலியுறுத்தினார்.