ஜூன்,16,2014. இறைவனே அன்பு, இந்த அன்பை உணராத சாத்தான், நம்மிடையே வெறுப்பை விதைப்பதில்
குறியாக இருக்கிறான் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று வழங்கிய மூவேளை
செப உரையில் கூறினார். ஜூன் 15, இஞ்ஞாயிறன்று கொண்டாடப்பட்ட மூவொரு இறைவன் திருவிழாவையொட்டி,
வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான
மக்களுக்கு நண்பகல் மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை, மூவொரு இறைவன் அன்புக்கு இலக்கணமாக
அமைந்துள்ளார் என்ற கருத்தை வலியுறுத்தினார். வெறுப்பு கொண்ட கிறிஸ்தவர் என்பது ஒன்றோடொன்று
பொருந்தாத இரு வார்த்தைகள் என்று கூறியத் திருத்தந்தை, கிறிஸ்தவர் என்ற வார்த்தையே அன்புசெய்பவர்
என்ற பொருள் கொண்டது என்று சுட்டிக்காட்டினார். அன்பின் ஊற்றாகிய மூவொரு இறைவன் திருநாளைத்
தொடர்ந்து, இயேசுவின் திரு உடல் திரு இரத்தம் திருநாளை திருஅவை கொண்டாடுவது பொருத்தமான
ஒரு செயல்பாடு என்று கூறியத் திருத்தந்தை, ஜூன் 19, வருகிற வியாழனன்று புனித ஜான் லாத்தரன்,
மற்றும், புனித மேரி மேஜர் பேராலயங்களில் கொண்டாடப்படும் இயேசுவின் திரு உடல் திரு இரத்தம்
திருநாளை அனைவரும் இணைந்து கொண்டாடுவோம் என்று அழைப்பு விடுத்தார்.