திருத்தந்தை பிரான்சிஸ் : சிரியாவில் அமைதி நிலவ செபிப்போம்
ஜூன்,14,2014. நம்மைப் பாதிக்காத துன்பத்தை மறக்கும் ஆபத்தை எதிர்கொள்கிறோம், நாம் பிறரின்
துன்பத்தைத் துடைக்க முன்வருவோம், சிரியாவில் அமைதி நிலவ செபிப்போம் என, இச்சனிக்கிழமையன்று
தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும்,
ஐரோப்பாவில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் கோடை விடுமுறை காலங்களாக உள்ளவேளை, திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்களின் புதன் பொது மறைபோதகம் வருகிற ஜூலை மாதத்தில் இடம்பெறாது, ஆனால், வருகிற ஆகஸ்ட்
6, 20 மற்றும் 27 தேதிகளில் வத்திக்கானில் இடம் பெறும். திருத்தந்தையின் தென் கொரியத்
திருப்பயணத்தை முன்னிட்டு(15-17) வருகிற ஆகஸ்ட் 13ம் தேதி புதன் பொது மறைபோதகம் இடம்
பெறாது. இன்னும், வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லத்தில் பொது மக்களுக்கென திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் நிகழ்த்தும் காலைத் திருப்பலியும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில்
இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.