வளரும் நாடுகளில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக மந்தமான பொருளாதாரம்
ஜூன், 11,2014. வளர்ந்துவரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக,
இந்த ஆண்டும் மந்தமாகவே இருக்குமென்று தெரிவதாக உலக வங்கி கூறியுள்ளது. உலகப் பொருளாதாரத்தைக்
கணித்து உலக வங்கி ஆண்டுக்கு இரண்டு முறை வெளியிடும் அறிக்கையில், இம்முறை வளர்ச்சி ஐந்து
விழுக்காட்டுக்கு குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலகில் ஏழ்மை மிகுந்த
நாடுகளில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு தேவையான அளவுக்கு வேலைவாய்ப்பை
உருவாக்கப் போதுமான பொருளாதார வளர்ச்சி இல்லை என்று உலக வங்கியின் தலைவர் Jim Kim தெரிவித்துள்ளார். ஏழை
நாடுகளில் எரிசக்தித்துறை, உள்கட்டமைப்புத்துறை, வர்த்தகச் சந்தைகள் போன்றவற்றில் பிரச்சனைகள்
இருப்பதே இந்த மந்தமான வளர்ச்சிக்குக் காரணம் என்று உலக வங்கி அறிக்கை கூறுகிறது. பொருளாதார
சீர்திருத்த செயல்திட்டங்களுக்கு மீண்டும் செயலூக்கம் அளிக்க இந்த நாடுகளின் அரசுகள்
நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.